கிண்ணியா-குறிஞ்சாக்கேணி படகு அனர்த்தத்தின் 4ஆம் ஆண்டு நினைவு!
-மூதூர் நிருபர்-
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு அனர்த்தம் நடந்து இன்றுடன் (நவம்பர் 23, 2025) நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2021ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி காலை 7:10 மணியளவில், கிண்ணியா மட்டுமல்ல முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய இந்த துயரச் சம்பவம், பல உயிர்களைப் பலியெடுத்த ஒரு கறுப்பு தினமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.
குறிஞ்சாக்கேணி கரையில் இருந்து சேவையில் ஈடுபட்ட படகு கவிழ்ந்த இந்த விபத்தில், அதில் பயணித்த 15 மாணவர்களும் 8 பொதுமக்களும் பெரும் அனர்த்தத்திற்கு உள்ளாகினர்.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாணவிகள், ஒரு கர்ப்பிணி தாயும் அவரது மகளும், அத்துடன் தாயும் மகனும் உட்பட எட்டு உயிர்கள் பலியெடுக்கப்பட்டன.
அனர்த்தத்தில் சிக்கிய மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன், உடல் மற்றும் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு, இந்தப் பாலத்தின் மீள் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது, பிரியாணிகளின் போக்குவரத்துக்கு மாற்று வழியாக, படகு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தனியாருக்கு சொந்தமான இந்த படகு, கவிழ்ந்ததனாலே இந்த அனைவருக்கும் ஏற்பட்டது.
சரியான பரிசோதனை நடவடிக்கைகள் எதுவும் இன்றி இந்த படகு சேவை ஆரம்பிக்கப்பட்டதனால், இந்த நிலை ஏற்பட்டதாக அப்போது, பலராலும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, நீதிமன்றத்தில் இந்த அனர்த்தம் குறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதும், அதன் தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. இந்த நிலையிலே, இன்றைய தினம் நான்காவது வருட நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
சோகம் நடந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் இன்னமும் முறையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
நிவாரணம் மற்றும் நீதிக்காக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையே நீடிக்கிறது.
அனர்த்தத்தின் நான்கு வருட நினைவு தினம் இன்று குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் சமய அனுஷ்டானங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிண்ணியா பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி தலைமையில் நடைபெற்றது.
இதில் மரணம் அடைந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
குறிஞ்சாக்கேணி மக்கள் எதிர்நோக்கிய பெரும் சிரமத்திற்கு நிரந்தர தீர்வாக அமையும் பாலத்தை நிர்மாணிக்கும் பணிகள், அனர்த்தம் நிகழ்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய அரசாங்கத்தின் காலத்தில், இந்த வருடம்தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பால நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, பொதுமக்கள் பயணம் செய்வதற்காக, முறையான, ஆபத்தில்லாத படகு சேவை ஒன்றை, வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவினால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனுடைய சேவை எதிர்வரும் புதன்கிழமை (நவம்பர் 26) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலதாமதமாக ஆரம்பிக்கப்பட்டாலும், இந்தப் பாலம் எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.
குறிஞ்சாக்கேணி மக்கள் தமது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் இந்த நான்காம் ஆண்டு நிறைவில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி மற்றும் இழப்பீடு விரைந்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.






