பாடசாலைக்குள் நுழைந்து மாணவிகள் கடத்தல்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் உள்ள ஒரு பாடசாலையிலிருந்து அண்மையில் 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு எதிரான தாக்குதல்கள், கடத்தல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதில், சில குழுக்கள் அங்குள்ள வெளிநாட்டினரையும், பாடசாலைப் பிள்ளைகளையும் கடத்தி பணப்பறிப்பிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தடுக்க முயன்றபோது ஆசிரியர் உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து கடத்தல்காரர்களிடம் இருந்து 2 மாணவிகள் தப்பிச் சென்று காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டதையடுத்து அவர்களின் உதவியுடன் மற்றைய மாணவிகளை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை , நைஜர் மாகாணம் பாபிரி நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ பாடசாலைக்கு அருகில் மாணவர்கள் தங்கும் விடுதியும் அமைந்துள்ளது.

அந்த விடுதிக்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் நுழைந்து துப்பாக்கி முனையில் 100 மாணவர்களை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரே வாரத்தில் 2 ஆவது முறையாக பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.