வடக்கு ஆசிரிய இடமாற்றத்தை தடை செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

வடமாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு தவணை இடப்பட்டது.

கடந்த இருபதாம் திகதி யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் வட மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் பாரபட்சம் இருப்பதாக தெரிவித்து குறித்த இடமாற்றத்தினை நிறுத்தும் தடை உத்தரவை வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கானது அன்றையதினமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த முறைப்பாட்டாளர் தொடர்பான விடையங்களுக்கு திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட அரச தரப்பினை பதில் வழங்குமாறு மன்று கட்டளையிட்டது.

இவ்வாறான நிலையில் குறித்த வழக்கானது யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அரச சட்டத்தரணி தயார் இல்லாத காரணத்தினால் வழக்கானது இம்மாதம் 24 ஆம் திகதி மீண்டும் தவணையிடப் பட்டுள்ளது.

குறித்த வழக்கில் வழக்கு தொடுனரான இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வருகை தந்ததுடன் அவர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகி இருந்தார்.