இலங்கை தொடருந்து திணைக்களத்தில் பெண்களுக்கு சிறப்புமிக்க அங்கீகாரம்

165 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இலங்கை தொடருந்து திணைக்களத்தில், முக்கிய பல பதவிகளுக்கு பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்ய கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதன்படி, தொடருந்து இயந்திர சாரதிகள், தொடருந்து பாதுகாப்பு அதிகாரி, தொடருந்து நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் தொடருந்து மேற்பார்வை முகாமையாளர் போன்ற முக்கிய பதவிகளுக்கு இந்த ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளன.

தொடருந்து திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது முதல் மேற்பார்வை முகாமையாளர் பதவி தவிர (2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது), ஏனைய அனைத்துப் பதவிகளுக்கும் இது வரை ஆண்கள் மாத்திரமே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.

அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கமைய, அரச துறையில் பெண்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான வசதிகளை வழங்கும் நோக்கத்துடன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 55 உறுப்புரையின் (1) உப பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.