-கிளிநொச்சி நிருபர்-
பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்த வலியுறுத்தி, கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட புளியம்பொக்கணை கலவெட்டித்திடல் நகேஸ்வர வித்தியாலய பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள், கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை, பாடசாலையின் நுழைவாயிலை மறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மாணவர்களும் வகுப்பறைக்கு செல்லாது நுழைவாயிலில் காத்திருந்தனர்.
குறித்த இடத்திற்கு, கிளிநொச்சி வடக்கு வலய திட்டமிடல் பிரதிக்கல்விப்பணிப்பாளர் வருகை தந்து, பெற்றோர்களுடன் கலந்துரையாடி, விடுமுறை நிறைவடைந்ததும் ஆசிரியர் வெற்றிடம் நிரப்புவதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


