 
												கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் “பன்னிரெண்டு மாத விளக்கு” வேலைத்திட்டம்
“அரச விருதுகளை நோக்கிய நூல்களை உருவாக்குவதில் உள்ள சவால்கள்” எனும் தலைப்பில் பத்தி எழுத்தாளர்கள் மற்றும் எழுத முனைவோருக்கான செயலமர்வும் சஞ்சிகைகளுக்கான கௌரவிப்பும் நேற்று வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டீ.எம். ரிம்ஸானின் நெறிப்படுத்தலில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாகவும், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.அஸ்பர் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் “பன்னிரெண்டு மாத விளக்கு” வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய வாசிப்பு மாதத்தினைச் சிறப்பிக்கு முகமாக நடந்தேறிய இந்த நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் எம். றமீஸ் அப்துல்லாஹ் வளவாளராக கலந்து கொண்டு அரச விருதுகளை நோக்கிய நூல்களை உருவாக்குவதில் உள்ள சவால்கள் மற்றும் பத்தி எழுத்தாளர்கள் மற்றும் எழுத முனைவோருக்கான வழிகாட்டலை செய்திருந்தார்.
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களைச் சேர்ந்த கலாசார உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றதோடு தொடர்ச்சியாக சஞ்சிகைகள் வெளியிட்ட குழுவினருக்கான கௌரவிப்பும், பங்குபற்றியோருக்கான பாராட்டுப் பத்திரமும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 
			

