பாடசாலை நேர நீடிப்புக்கு கடும் எதிர்ப்பு – இலங்கை ஆசிரியர் சங்கம்

அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்ததையடுத்து, இந்த உத்தேச நகர்வுக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் பாடசாலைகள் மீண்டும் திறக்கும்போது, ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ ஆங்கில நாளிதழொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

“இந்த முடிவை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இது எந்தவொரு உளவியல் அல்லது கல்வி ஆய்வு பூர்வமான முடிவும் அல்ல. எனவே, பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த முன்மொழிவுக்கு சங்கம் எந்தக் காரணம் கொண்டும் இணங்காது என்றும், ஆனால் அதிகாரிகள் தரப்புடன் கலந்துரையாடல்களை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.