நாளை கடுமையான சூறாவளி புயலுக்கு வாய்ப்பு

வங்காள விரிகுடாவின் வடகிழக்கில், இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் ‘மோந்தா’ சூறாவளி நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் கடுமையான சூறாவளி புயலாக மேலும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளி நாளை  செவ்வாய்க்கிழமை மாலை அல்லது இரவு இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது.