புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் நிலுவைச் சம்பளத்தை வழங்கக் கோரி போராட்டம்!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் சம்பளம்கோரி மூன்றாவது நாளாகவும் நேற்று வெள்ளிக்கிழமை நிறுவனத்தின் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து யூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் PL-1-2016 சம்பள அளவுத்திட்டத்தின்கீழ் அமைய அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்ட குறித்த ஊழியர்களே, 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்து, நிறுவனத்தின் முன்பாக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

குறித்த காலப்பகுதியில் நியமனம் வழங்கப்பட்ட 83 ஊழியர்களுக்கு நியமனம் வழங்கிய நாளில் இருந்து இன்றுவரை 15 மாதங்களுக்கு மேலாக எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை எனவும், இதனால் தாம் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த நிலுவைச் சம்பளத்தை வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கடந்த வருடம் மார்ச் மற்றும் யூன் மாதங்களில் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள்.

இதன்போது தீர்வை வழங்குவதாக அறிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டிருந்தார்கள் இருப்பினும் இதுவரை எவ்வித தீர்வுகளும் தமக்கு வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.