வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்கு தடை

2026 ஜனவரி முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் தீர்மானத்தை நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் அதனை நிறைவேற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேநேரம் , போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்த ஒருவழிப் பாதைகளை அறிமுகப்படுத்தல், கனரக வாகனங்களின் பாவனைக்கு நேரக்கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியனவற்றைச் செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் மழைக் காலத்துக்கு முன்னர், வெள்ளம் வடிந்தோடுவதற்கு தடையாக அமைந்துள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்கின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உரிய சுகாதார வசதிகளைக் கொண்டிருக்கவில்லை எனவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாக அவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.