பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து, நேற்று பழுதடைந்து வீதியின் இடை நடுவில் நின்றதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து மருதங்ககேணியில் பழுதடைந்து நின்றது.

பழுது பார்த்த பின்னர் மருதங்கேணியில் இருந்து புறப்பட்ட பேருந்தானது மீண்டும் இடை நடுவே பழுதடைந்தது.

பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது,  மீண்டும் அதே பேருந்து பருத்தித்துறையில் இருந்து கேவில் நோக்கி நேற்று மாலை புறப்பட்டது.

அதிகளவான பயணிகளை ஏற்றி வந்த குறித்த பேருந்து மீண்டும் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்தது,  இதனால் குடாரப்பு தொடக்கம் கேவில் வரை செல்ல வேண்டிய பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதன்போது இரவு வேளையில் குழந்தைகளுடன் பலர் வீதியில் நின்றதை காணக்கூடியதாக இருந்தது

வடமராட்சி கிழக்கு மக்கள், வடமராட்சி கிழக்கு பகுதிக்கு தரமான பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்தனர்.

அண்மையில் வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பாக பேசப்பட்டபோது, நல்ல நிலையிலுள்ள பேருந்தை வடமராட்சி கிழக்கிற்கான சேவையில் ஈடுபடுத்துமாறு வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ரஜீவன் உத்தரவிட்டிருந்தார்.

ஆனாலும், பருத்தித்துறை இலங்கை போக்குவரத்துசாலை முகாமையாளர் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு,  சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக்கூடிய நல்ல தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபடுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.