
சுற்றுலாவில் LGBTIQ ஊக்குவிப்பு இல்லை, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே நோக்கம்!
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக LGBTIQ (ஒரு பாலீர்பாளர், இருபாலீர்பாளர்,மாற்றுபாலினத்தவர், பால்புதுமையினர்) சமூகத்தை ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டோம் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.
சகல பயணிகளுக்கு இந்த நாடு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்துவதே தமது ஒரே நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிடப்பட்டுள்ள 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இலக்கை அடைவதற்காக கலாசாரத்திற்கு முரணான எதையும் செய்ய மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு கடிதம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாகவே புத்திக ஹேவாவசம் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
EQUAL GROUND என்ற அமைப்புடன் இணைந்து LGBTIQ சுற்றுலா மேம்பாட்டுக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ஒப்புதல் அளிப்பதாகக் கூறி, புத்திக ஹேவாவசம் கையெழுத்திட்ட ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றது.
இந்தநிலையில், “இது பிரசாரமோ அல்லது விளம்பரத் திட்டமோ அல்ல. இது சமத்துவத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் வழங்கும் உறுதிப்படுத்தல் மட்டுமே,” என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெளிவுபடுத்தினார்.
“தமது நிறுவனம் வழங்கிய கடிதம் குறித்து சமூகத்தில் ஒரு தவறான கருத்து உள்ளது. அந்தக் கடிதம் LGBTIQ சமூகம் சுற்றுலாத் துறையுடன் எவ்வாறு இணைவது என்பது பற்றி மட்டுமே பேசுகிறது.
ஆனால், இதை LGBTIQ சுற்றுலாவை மேம்படுத்த நாங்கள் விளம்பரப்படுத்துவதாகத் தவறாகப் பொருள் கொள்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
அரசாங்கமும், நிறுவனமும் அனைத்து இனங்கள், மதங்கள் மற்றும் பாலினத்தைச் சேர்ந்தவர்களின் சமத்துவத்தைப் பேணுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன என்று கூறிய அவர், நாட்டின் சட்டதிட்டங்களுக்கோ அல்லது கலாசார விழுமியங்களுக்கோ எதிராகச் செயல்பட மாட்டோம் என்று உறுதியளித்தார்.
“இலங்கையின் கலாசாரம், மதம் மற்றும் விழுமியங்கள் குறித்து நாங்கள் மிகுந்த உணர்வுடன் இருக்கிறோம். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, ஒருபோதும் ஒருபால் சுற்றுலாவுக்குப் பிரசாரம் செய்யாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
ஒவ்வொரு வகை சுற்றுலாப் பயணிகளின் சமத்துவத்தைப் பாதுகாப்பதே எங்களின் முக்கியப் பொறுப்பு. இந்த எண்ணத்தை சுற்றுலாத் துறையில் நிலைநிறுத்தவே அந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றக் கடிதம் வழங்கப்பட்டது.
கர்தினாலின் உணர்வுபூர்வமான கருத்து தவறான விளக்கத்தினால் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்புகிறேன்
கர்தினாலின் முழு அறிக்கையையும் பார்க்கும்போது, “பிறப்பால் சமத்துவமற்ற நிலையில் உள்ளவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்” என்ற கருத்தை அவரும் வலியுறுத்துகிறார். நாங்களும் அதே கருத்தில்தான் இருக்கிறோம். சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்குவதே எங்களின் ஒரே நோக்கம்,” என்றும் அவர் கூறினார்.
