மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்றைநெறிக்கான இறுதி நாள் கலை விழா
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழாவானது தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர் கயான் சம்பத் பொத்துபிடிய தலைமையில் ஒல்லாந்தார் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது.
அரச உத்தியோத்தர்களுக்கான 150 மற்றும் 100 மணித்தியாலங்களை கொண்ட இரண்டாம் மொழி சிங்கள கற்றைநெறிக்கான இறுதி நாள் கலை விழா சிறப்பாக இடம்பெற்றது.
அதிதிகளுக்கு சிங்கள பாரம்பரிய முறைப்படி வெற்றிலை கொடுத்து வரவேற்று மங்கள விளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது 150 மணித்தியால கற்கை நெறியினை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களினால் கண்கவர் கலை கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்திருந்தன.
நாடளாவிய ரீதியில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இக் கற்கைநெறியில் மட்டக்களப்பு மாவட்ட மாவட்டத்தில் மற்றும் வேறு மாவட்டங்களில் பல்வேறு திணைக்களங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களான பொது சுகாதார பரிசோதகர்கள், ஆசிரியர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், மற்றும் பல திணைக்களங்களைச் சார்ந்த உத்தியோகத்தர்கள் இக்கற்கைநெறியினை பூர்த்தி செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் மேல் மாகாண ஒருங்கிணைப்பாளர் ஹிரோசிமா பெரேரா, தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உத்தியோகத்தர் வி.சந்திரகுமார், பயிற்சி நெறியின் வளவாளர்களான செல்வி.எம்.கே.திலினி மதுசிகா, திருமதி சஹானா, துயோக்காந்த் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளதுடன், நிகழ்வின் இறுதியில் அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழி வாண்மையை மேம்படுத்துவதற்கும் அவர்களின் அலுவலக கடமையில் ஈடுபடும் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதாக இக்கற்கை நெறி அரச உத்தியோத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.