மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும் அரசியல் தொடர்புகள் எதிர்காலத்தில் படிப்படியாக வெளிப்படும்!
இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்புடன் பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசியல்வாதிகள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த சில தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் சூழலில், எவரும் அச்சமடைய வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது வாக்குமூலங்களின் அடிப்படையில் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
எனவே, மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும். அரசியல் தொடர்புகள் எதிர்காலத்தில் படிப்படியாக வெளிப்படும்,” என்றார்.
அதேவேளை, அரசியல்வாதிகள் போதைப்பொருள் வலையமைப்புடன் கொண்டிருந்த உறவுகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, இவ்வாறு வெளிப்படுத்தப்படும் எந்தப் பெயரும் நடைபெற்று வரும் விசாரணைகளில் இடையூறு விளைவிக்கும் என்பதால், தற்போது பெயர்கள் அறிவிக்க இயலாது என்று காவல்துறை பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
