ரகசா சூறாவளி: தாய்வானில் வெள்ளத்தில் மூழ்கி 14 பேர் உயிரிழப்பு

ரகசா சூறாவளி வலுவடைந்துள்ள நிலையில் தாய்வானின் கிழக்கு மாவட்டமான ஹுவாலியனில், மலைகளில் உள்ள ஏரியொன்று நிரம்பி அதன் தடுப்பனை உடைந்து, குவாங்ஃபு நகரம் வெள்ளத்தில் மூழ்கியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

120இற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

இதேநேரம் ஹொங்கொங் தமது எச்சரிக்கையை 10 ஆம் நிலைக்கு உயர்த்தியுள்ளது, இது உச்சபட்ச எச்சரிக்கையாகும்.

இதன்காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த சூறாவளி காரணமாக தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலிருந்து சுமார் 370,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தெற்கு சீன பகுதியில் அடுத்த சில மணி நேரங்களுக்குள் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் பாரிய மண்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்கூறப்பட்டுள்ளது.