கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பல்

இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ் சத்புத்ரா இன்று (20) விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்ய  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கப்பலை கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

நாட்டை வந்தடைந்துள்ள Frigate வகைக்குரிய ஐ.என்.எஸ் சத்புத்ரா என்ற கப்பல் 142.5 மீற்றர் நீளம் கொண்டதுடன், 403 பேரினை கொண்ட அங்கத்துவ குழுவினரைக் கொண்டுள்ளது.

இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் விகாஸ் கர்க் (Vikas Garg) கடமையாற்றுகின்றார்.

ஐ.என்.எஸ் சத்புத்ரா கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் அங்கத்துவ குழுவினர்கள் நாட்டிலுள்ள பல சுற்றுலாத் தலங்களை  பார்வையிடவுள்ளதாக  இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.