நினைவேந்தல்களை வைத்து அரசியல் செய்வது அயோக்கியத்தனத்தின் உச்சம் – இளங்குமரன்

-யாழ் நிருபர்-

நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும்? என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தியாக தீபம் திலீபன் அண்ணனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க வந்த அமைச்சர் சந்திரசேகருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையைத் தடுப்பது, தமிழ்க் காங்கிரஸ் முன்னணியின் செயல் எனில் அது அயோக்கியத்தனத்தின் உச்சமே ஆகும்.

யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம், அதுதான் மனித மாண்பு. திலீபன் அண்ணன் போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலர் இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர்.

அவர்களை முன்னணியே தேர்தல் அரசியலுக்காக அருகில் நிறுத்திக் கொள்கிறது. ஆனால், மற்றவர்களை அனுமதிக்க மறுப்பது எத்தகைய முரண்பாடு?

ஒரு மாவீரனின் – தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். இது மனித மாண்புகளை மீறிய காட்டுமிராண்டித்தனமே தவிர வேறில்லை, என குறிப்பிடப்பட்டுள்ளார்.