மக்களின் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் வீதிகளில் உலர விடப்பட்ட மீன் பிடி வலைகள்

மன்னார் நகர சபை எல்லைக்குள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதிகளிலும் பொது இடங்களிலும் உலர வைக்கப்பட்ட மீன்பிடி வலைகளை இன்றைய தினம் புதன்கிழமை  மன்னார் நகரசபை ஊழியர்கள் அப்புறப்படுத்தி கையகப் படுத்தியுள்ளனர்.

நீண்ட காலங்களாக மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சில மீனவர்கள் ஆபத்தான முறையில் பிரதான வீதிகளிலும் உள்ளக வீதிகளிலும் வலைகளை உலர விடுவதால் துர்நாற்றம் உட்பட விபத்துக்கள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் நகரசபை ஊழியர்களினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக கிடைக்க பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய முதல் கட்டமாக இன்றைய தினம் புதன்கிழமை ஜிம்றோன் நகர் மற்றும் எமில் நகர் பகுதிகளில் உள்ள வீதிகளில் உலர விடப்பட்டிருந்த வலைகள் நகர சபையினால் அப்புறப்படுத்தப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் மன்னார் நகர சபை எல்லைக்குள் உள்ள பிற பகுதிகளில் தொடர்ச்சியாக போக்குவரத்துக்கும் மக்களின் நடமாட்டத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வலைகள் உலரவிடும் மீனவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதுடன் வலைகளும் கையகப்படுத்தப்படவுள்ளது.