காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை

எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் நடைபெற உள்ள போராட்டம் குறித்து அம்பாறை மாவட்டம் கல்முனை ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

வடக்கில் சங்கிலியன் சிலையிலிருந்து தொடங்கி செம்மணி வரை இப்பேரணி நிறைவடைந்து அவ்விடத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அதே நாளில் கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பித்து காந்தி பூங்கா வரை ஊர்தி ஊர்வலத்துடன் சென்று கவனஈர்ப்பு போராட்டம் காந்தி பூங்காவில் முன்னால் இடம்பெறும் .

இப்போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறு கேட்டு நிற்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.