சீரற்ற வானிலை – சாரதிகள் அவதானம்

மலையக பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நோர்டன்பிரிட்ஜ், மஸ்கெலியா மற்றும் லக்சபான பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்து பாதிக்கப்பட்டிருந்த பிரதான போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நோர்டன்பிரிட்ஜ் பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் மண் மேடு சரிந்தது.

பின்னர் லக்சபான இராணுவ முகாம், நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் ஆகியோரால் குறித்த மண்மேடு அகற்றப்பட்டது.

அதன் பின்னர் வீதியின் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், மத்திய மலைநாட்டில் உள்ள பிரதான மற்றும் சிறிய வீதிகளில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.