நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன தகடுகளை வழங்க நடவடிக்கை!

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன தகடுகளை வழங்குவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு முறையாக ஏலத்தை திறந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

இந்த குழு முன்வைக்கப்பட்ட விலைமனுக்களை மதிப்பாய்வு செய்து வருவதாகவும், போக்குவரத்து அமைச்சு விரைவில் சிறந்த விநியோகஸ்தரை அங்கீகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் அதிகாரப்பூர்வமான சேதமாகாத இலக்க தகடுகளை வழங்குவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் எதிர்பார்க்கிறது.

தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு தரநிலைகள், செலவுத் திறன், விநியோக திறன் மற்றும் விநியோகஸ்தர் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

பெப்ரவரியில் தனிப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதித் தடை நீக்கப்பட்டதிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட 15,000 க்கும் மேற்பட்ட சிற்றூந்து, வேன்களும் 80,000 க்கும் மேற்பட்ட உந்துருளிகளும் அதிகாரப்பூர்வ தகடுகளுக்காகக் காத்திருக்கின்றன.

தகடுகளுக்கான பற்றாக்குறை காரணமாக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தற்காலிகமாக அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட இலக்கங்களை வெளியிட்டுள்ளதுடன் அவை செல்லுபடியாகும் என பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.