வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கத்துக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு!

எதிர்வரும் திங்களன்று வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட உள்ள நிர்வாக முடக்கத்துக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் கையொப்பமிட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலை, இலங்கை இராணுவ உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டதாக அறியப்படுகிறது.

பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய படைகள் தாமே சட்டமும் ஒழுங்கும் இழந்து இப்படிப்பட்ட கொடூரச் செயல்களைச் செய்வது, இந்த நாட்டின் சட்ட அமுலாக்கத்தின் ஆழமான சீர்கேட்டை வெளிப்படுத்துகிறது.

இப்படிப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்பேற்கச் செய்வதில் அரசின் இயலாமை, அல்லது விருப்பமின்மை, பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்து, நிரபராதிகளின் உயிரை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது.

இன்னும் ஒரு கவலைக்குரிய விடயம் என்னவெனில் அரசாங்கம் இஸ்ரேலிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா விலக்கு வழங்கும் போக்காகும்.

இவர்கள் பலர் காசாவில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியதாகப் பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) உறுப்பினர்களே.

இந்த சூழ்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ள நிர்வாக முடக்கத்தை முழுமையாக ஆதரிக்க எங்கள் கட்சி தீர்மானித்துள்ளது.

இது நீதி, பொறுப்புகூறல், மற்றும் இராணுவத்தினுள் நிலவும் தண்டனையற்ற சூழ்நிலைக்கு முடிவு கோரும் அமைதியான எதிர்ப்பாகும்.

வடகிழக்கில் உள்ள நமது முஸ்லிம் சகோதரர்களும், சகோதரிகளும், திங்கட்கிழமை 18 ஆம் திகதி குறைந்தபட்சம் காலை நேரத்தில் தங்கள் கடைகள் மற்றும் தொழில்களில் இருந்து விலகியிருப்பதன் மூலம் இந்த ஒற்றுமை போராட்டத்தில் இணையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து வன்முறையை நிராகரித்து, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.