காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்துக்கு அனுமதி

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் காசா நகரத்தை முழு இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கைப்பற்றும் திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .

காசா பகுதியின் வடக்கே அமைந்த காசா நகரம் உள்ளிட்ட 25% பகுதி மாத்திரமே தற்போது இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இல்லை, ஏனெனில் இஸ்ரேல் ஏற்கனவே காசாவின் 75% பகுதியைக் கைப்பற்றி, பல எல்லைகளை முத்திரையிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், காசா நகரத்தில் உள்ள சுமார் ஒரு மில்லியன் பலஸ்தீனர்களை தெற்கு காசாவில் உள்ள பாதுகாப்பு முகாம்களுக்கு இடமாற்றம் செய்யவும், அங்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எயால் ஜமீர், இந்த முழு ஆக்கிரமிப்பு திட்டம் இஸ்ரேலிய படைகளை காசாவில் சிக்க வைப்பதுடன், ஹமாஸால் பிடிக்கப்பட்ட 50 பணயக்கைதிகளில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரித்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை பலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தும் என ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன.

நெதன்யாகு, காசாவை ஆக்கிரமித்த பின், அதை நிர்வகிக்கும் பொறுப்பை நட்பு அரபு நாடுகளுக்கு வழங்குவதாகவும், ஹமாஸை முறியடித்து பணயக்கைதிகளை மீட்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.