வரலாற்றுசிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் மஹோற்சவம் நாளை
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை(15) கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்டதாகவும் இராம பிரானால் வழிபடப்பட்டதாகவும் கருதப்படும் மாமாங்கேஸ்வரரின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை கொண்டுசெல்லும் நிகழ்வு நேற்று இன்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று ஆலய வண்ணக்குமார்கள்,பக்தர்கள் புடைசூழ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு நகர் மற்றும் அரசடி ஊடாக பார் வீதியினை அடைந்து பார் வீதியூடாக ஆலயத்திற்கு ஊர்வலமாக கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது.
நாளை பகல் 12.00மணிக்கு கொடியேற்றத்துடன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகவுள்ளது.
பத்து தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் தம்ப பூஜை,வசந்த மண்டப பூஜை,சுவாமி உள்வீதியுலா,வெளிவீதியுலா என்பனவை நடைபெறவுள்ளன.
எதிர்வரும் 23ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 24ஆம் திகதி மிக முக்கியத்துவமான ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் தீர்த்தக்கேணியில் சிறப்பாக நடைபெறவுள்ளன.