ஊடகவியலாளர் மப்றூக் மீது தாக்குதல்: சந்தேக நபரை கைது செய்யுமாறு உத்தரவு
சிரேஷ்ட ஊடகவியலாளர், நாம் ஊடகர் பேரவையின் தலைவர் யூ எல் மப்றூக் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அட்டாளைச்சேனையை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், கடந்த 2 ஆம் திகதி இரவு – தனது நன்பர்களுடன் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்துக்கு அருகில் பேசிக் கொண்டிருந்த போது, றியா மசூர் தலைமையில் அங்கு வந்த சிலரால் தாக்கப்பட்டார்.
தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் – றியா மசூர் உள்ளிட்ட சிலர் மது போதையில் இருந்ததாக, சம்பவம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் மப்றூக் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆயினும் சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
இதேவேளை, அவர்களை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது.