மட்டு.போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாக இடம்பெற்ற மோசடி : சிற்றூழியர் கைது!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், வைத்தியர் மருந்து சீட்டை போலியாக தயாரித்து, விலை உயர்ந்த நோய் வலிக்கான றமடோல் (TRAMADOL) என்ற மாத்திரையை பெற்று கொள்ள முயற்சித்த, வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றி வரும் ஆண் சிற்றூழியர் ஒருவரை, நேற்று வியாழக்கிழமை காலை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாத்திரை சத்திரசிகிச்சை செய்யப்பட்ட பின்னர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாத்திரை.
குறித்த மாத்திரையை, வைத்தியரின் மருந்து சீட்டு இல்லாமல் வைத்தியசாலை மருந்தகத்திலோ, வெளியிலுள்ள பாமசிகளிலோ பெற்றுக் கொள்ளமுடியாது.
இவ்வாறான நிலையில், குறித்த சிற்றூழியர் வைத்தியரின் மருந்து சீட்டை போலியாக தயாரித்து, அதனை அவருடைய பிரதேசத்தைச் சேர்ந்த நபரை வைத்து, அவர் மூலமாக வைத்தியசாலை மருந்தகத்தில் நீண்ட நாட்களாக பெற்று வந்துள்ளார்.
இதனையடுத்து, வைத்தியசாலை மருந்தகத்தில் மருந்து மாத்திரை வழங்குபவர்கள் குறித்த வைத்தியரின் மருந்து சீட்டு போலியானது என கண்டுபிடித்தனர்.
அதனைத்தொடர்ந்து, முறைகேடாக மாத்திரையை பெற்று வந்த வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றி வந்த ஆண் சிற்றூழியரையும் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதையடுத்து, சம்பவதினமான நேற்று, வழமைபோல குறித்த சிற்றூழியர் மாத்திரையை பெற்றுக் கொள்வதற்காக, அவருடைய ஊரைச் சேர்ந்த ஒருவரை வரவழைத்து, அவரின் நோய்க்கு குறித்த மாத்திரையை வழங்கும்படி வைத்திய மருந்து சீட்டை தயாரித்து, அவருக்கு உதவி செய்வது போல அந்த மருந்து சீட்டுடன் அவரைக் கூட்டிக் கொண்டு வைத்தியசாலை மருந்தகத்துக்கு சென்றுள்ளார்.
இதன் போது, மருந்து வழங்குபவர்கள் அந்த மருந்து சீட்டை வாங்கி கொண்டு, காத்திருக்கும்படி தெரிவித்து விட்டு, பணிப்பாளருக்கு அறிவித்ததையடுத்து, அங்கு பொலிசார் வரவழைக்கப்பட்டு, முறைகேடாக போலி மருந்து சீட்டு தயாரித்து மாத்திரை பெற்றுக் கொள்ள முயற்சித்த சிற்றூழியரை கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட நபர் நீண்ட காலமாக குறித்த மாத்திரையை பெற்று வந்துள்ளதுடன், வலி நிவாரணியாக பாவிக்கும் குறித்த மாத்திரையை, போதைக்காக பாவித்து வருவதுடன், அதனை பெற்று வேறு நபர்களுக்கும் வழங்கி வந்துள்ளதாக, பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
இதனையடுத்து, பொலிஸார் குறித்த நபருக்கு எதிராக தண்டனைச்சட்டகோவை 459 பிரிவின் கீழ் போலியாக மருத்துவ சீட்டு தயாரித்த குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை வழக்கு தாக்கல் செய்து, அவரை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 14 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.