இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வர மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

 

-மன்னார் நிருபர்-

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 07 ராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை மாலை உத்தரவிட்டார்.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்க சென்ற ஏழு மீனவர்கள் நேற்று திங்கள் இரவு எல்லை தாண்டி மீன்பிடித்த நிலையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை இன்று மதியம் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று செவ்வாய் மாலை குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 07 மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.