
-மன்னார் நிருபர்-
மன்னார் நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று காலை 11.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் மன்னார் நகர சபையில் நடைபெற்றது.
தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டது.
சபையில் உள்ள 16 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் வருகை தந்த தோடு,ஒரு உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை.
அதிக உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர், கலந்து கொண்ட 15 உறுப்பினர்களில் 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர், ஒரு உறுப்பினர் நடுநிலை வகித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனுக்கு 06 வாக்குகளும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தனுக்கு 08 வாக்குகளும் கிடைக்கப்பெற்ற நிலையில், கூடிய வாக்குகளை பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் மன்னார் நகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.
இவருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கி இருந்தது.
உப தவிசாளர் தெரிவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நூர் முகம்மது முகம்மது உசன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் சோமநாத் பிரசாத் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.
இதன் போது கூடுதலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர், வாக்களிப்பில் இரண்டு உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
வாக்களிப்பின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நூர் முகம்மது முகம்மது உசன் 08 வாக்குகளையும், இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் சோமநாத் பிரசாத் 05 வாக்குகளையும் பெற்ற நிலையில், கூடுதல் வாக்குகள் பெற்ற நூர் முகம்மது முகம்மது உசன் மன்னார் நகர சபையின் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அவருக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கி இருந்தது.
குறித்த தெரிவுகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன்,செல்வம் அடைக்கலநாதன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
