திருமலை விபத்தில் வைத்தியர் பலி
-மூதூர் நிருபர்-
திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் நிரப்பிக் கொண்டு சென்ற பவுசர் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த வைத்தியர் கெல்வின் (வயது-59 என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்த அவருடைய நெருங்கிய உதவியாளர் என்.லாபீர் (வயது -55) எனவும் தெரியவருகின்றது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி செலுத்திச் சென்ற நபர் படுகாயம் அடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த வைத்தியரின் சடலம் சேருநுவர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.