
நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியை : போக்குவரத்து மட்டுப்பாடு!
மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதி சடங்குகள் இன்று திங்கட்கிழமை சுதந்திர சதுக்கத்தில் அரச கௌரவத்துடன் நடைபெற உள்ளன.
இந்நிலையில், சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் போக்குவரத்துப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மாலினி பொன்சேகாவின் பூதவுடல் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (26) சுதந்திர சதுக்க மாளிகையிலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் சுதந்திர சதுக்க வளாகத்தில் அரச கௌரவத்துடன் நடைபெறவுள்ளது.
அதன்படி, இறுதிக் கிரியை அரச அனுசரணையுடன் கொழும்பு 7 சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.
‘இலங்கை சினிமாவின் ராணி’ என்று அழைக்கப்படும் மாலினி பொன்சேகா கடந்த சனிக்கிழமை தனது 78ஆவது வயதில் காலமானார்.
மாலினி பொன்சேகாவின் பூதவுடல் இன்று காலை கொழும்பு 7 சுதந்திர சதுக்க மாளிகைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு காலை 9 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 3.30 மணியளவில் அவர் கல்வி கற்ற களனி குருகுலக் கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் கலைஞர்களால் பௌத்த மதச் சடங்குகளுக்காக கட்டப்பட்ட விசேட மேடைக்கு அவரது பூதவுடல் கொண்டு செல்லப்படவுள்ளது.
பின்னர் மத சடங்குகள் நிறைவுள்ள பின்னர், அவர் திரையுலகுக்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் திரைப் பயண வாழ்க்கை குறித்த கலைஞர்களின் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
பிற்பகல் 5.45 மணியளவில் மறைந்த நடிகை மாலினியின் பூதவுடல் தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரது இறுதிச் சடங்குகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை இடம்பெறவுள்ள காரணத்தால் சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய, கிரியை நிகழ்வுகள் மற்றும் இறுதி ஊர்வலம் இடம்பெறுவதை முன்னிட்டு எந்தவொரு வீதியும் மூடப்படாது எனவும், இறுதி ஊர்வலம் பொது நிர்வாக அமைச்சு சந்தியிலிருந்து சுதந்திர மாவத்தை வழியாக சுதந்திர வளாகம் வரையில் பயணிக்கும் போது, சுமார் 15 நிமிடங்களுக்கு சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர மாவத்தை வரையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கிரியை நிகழ்வுகள் நடைபெறும் போது, அருகிலுள்ள சுதந்திர மாவத்தை மற்றும் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் செல்லும் பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
