மே 18 தமிழின துக்க நாள் என அறிவித்து தமிழ் நாட்டில் விடுமுறை விட முடியாதா? சீமான் சீற்றம்
ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர் ரெட்டி மறைவுக்கு தமிழ்நாட்டில் பொது விடுமுறை விடுத்தது கருணாநிதி அரசு. மே 18 அன்று பிரபாகரன் இறந்த நாள், தமிழினம் அழிந்த நாள் அன்று தமிழினம் துக்க நாள் என அறிவித்து விடுமுறை விட முடியாதா? திமுக கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட முடியாதா?” என சீமான் சீற்றத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா – கோயம்புத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மே 18 மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வாறு தனதுரையில் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றும் போது தெரிவித்துள்ளதாவது.
“நாம் வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட மக்கள். சொந்த மண்ணிலேயே தாய் நிலத்திலேயே நாம் தமிழர்கள் என்ற உணர்வைப் பிளவுண்டு இருந்தோம். போராடித்தான் ஆக வேண்டும் என்று தள்ளப்பட்ட மக்கள் நாம். இந்த மண்ணிலிருந்து தமிழினம் விலகிச் செல்ல முடியாது என பிரபாகரன் சொல்லியிருக்கிறார். போராடத்தான் வேண்டும் என்று 15 ஆண்டுகளாக இந்த மண்ணில் இருந்து வருகிறோம்.
வாழ்க, ஒழிக என்று கோஷம் இல்லாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. தலைவன் வாழ்க என்று கூறுபவர்கள் நாம் அல்ல தமிழ்த்தாய் வாழ்க என்று கூறுபவர்கள். உலகத்தின் பல்வேறு நிலப்பரப்பை வென்றவர் நம் முன்னோர்கள். எந்த மக்களையும் அடிமைப்படுத்தி நம் முன்னோர்கள் வாழ்வில்லை.
தமிழன் மக்களை அடிமைப்படுத்தி ஆண்டார் என்ற செய்தி எங்கேயாவது உண்டா? பின் சிங்களவர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட நினைத்தால் அமைதியாக இருக்க நாம் எலிகள் அல்ல புலிகள்.
மூவேந்தர்கள் வழியில் வந்தவர்கள். ஈவு இறக்கம் காட்டிய வாரிசுகள்இ காக்கைஇ குஞ்சுகள் எங்கள் சாதி என்ற சொன்னவர்கள் ஈவு இரக்கம் இன்றி கொல்லப்பட்டது இன்றுதான்.
வரலாற்றில் பெருந்துயரம் ஈழத் தமிழினப் படுகொலை. மாட்டுக்கு நீதி சொன்ன வாரிசுகளுக்கு உலகத்தில் நீதி சொல்ல ஆளில்லை. ஒன்று இரண்டு கோடி மக்களுக்கு தனி நாடு இருக்கும்போது 11 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் மக்கள் ஏன் தனி நாடு கொள்ளக்கூடாது.
மூத்த மொழி தமிழ் மொழி அழிகிறது. மொழி அழிந்தால் இனம் அழியும். நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் பலத்தை இழந்தால் இனத்தை இழப்போம். நாம் இல்லையென்றால் இந்தச் சாவைப் பற்றிப் பேச நாவு இருக்குமா? இதைப் பற்றிப் பேச ஒருத்தன் கிடையாது. கடைசியாகத் தலைவனைச் சந்தித்த மகன் நான் தான்.
எனக்கும் என் தலைவனுக்குக் கடைசியில் என்ன நடந்தது என இருவருக்கும் தான் தெரியும். புலிகளைக் கொல்ல வேண்டும் என்று முயற்சித்தது இங்குள்ள ஆட்சியாளர்கள் தான். ஆனால் அவர்கள் தான் இன்றும் ஆட்சியாளர்களாக உள்ளார்கள் என சீமான் தனதுரையில் தெரிவித்துள்ளார்.