உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் உள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில், தரம் 11இல் கல்வி கற்று வந்த குறித்த மாணவி, மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது மரணத்துக்கு ஆசிரியர் ஒருவர் மீது குற்றம் சுமத்தி சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொலிஸார் உத்தியோகபூர்வமான பதில் எதனையும் இதுவரையும் வழங்கவில்லை.

இந்தநிலையில், குறித்த மாணவியின் மரணத்துக்கு, உரிய பதில் வழங்குமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்துமூலம் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமது மகளை இந்த சமூகமே தனிமைப்படுத்தி விட்டதாக, குறித்த மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்