
ஈழத்தமிழர் கல்வி வாரத்துக்கு எதிரான மனுக்களை நிராகரித்த கனடா உயர் நீதிமன்றம்!
கனடாவின் ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒன்டாறியோ மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை கனேடிய உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதன்படி, குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இருக்காது என்பதனை கனேடிய உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாக ஒன்டாரியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
கனடாவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை நினைவுகூர்வதற்காகக் கொண்டு வரப்பட்ட 104 என்ற சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்காளி சார்பில் மன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்த நெவில் ஹெவகே, 104 என்ற சட்டமூலம் கல்வி நோக்கங்களைக் கொண்டிருக்கவில்லை என வாதிட்டார்.
அதேநேரம் குறித்த சட்டமூலத்தை ஒன்டாரியோவில் கல்வி நோக்கத்திற்காகப் பயன்படுத்த முடியாது எனவும் சுய விழிப்புணர்வு மற்றும் நினைவு கூர்தல் நோக்கங்களுக்காக மாத்திரம் அதனைப் பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, ஒன்டாரியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் இந்த தீர்ப்புக்கு அமைய ஒன்டாரியோவில் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் நினைவு கூரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
