வியாழேந்திரனின் கைதுக்கான காரணம் வெளியானது !
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர், அமைப்பாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கடந்த வருடம் 15 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கியவருக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை பகுதியில் வைத்து இலஞ்ச உழல் ஆணைக்குழுவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக, பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கடந்த 2024ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மண் அகழ்விற்கு அனுமதி பெற்றுதருவதாக வர்த்தகர் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் மற்றும் பிரதேச அமைப்பாளர் ஆகிய இருவரையும் மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப்பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் குறித்த சம்பவத்துக்கு உடந்தையாக அமைச்சர் இருந்துள்ளார் என கண்டறிந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்த நிலையில் அமைச்சரின் செயலாளரின் வழக்கு விசாரணைக்காக செயலாளர் அமைப்பாளருடன் சம்பவதினமான இன்று புதுக்கடை நீதிமன்ற பகுதிக்கு முன்னாள் அமைச்சர் சென்றுள்ள நிலையில் அவரை அங்கு வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அமைச்சரை புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து ,அவரை எதிர்வரும் ஏப்பிரல் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை கடந்த 2022ஆம் ஆண்டு யூன் 21ஆம் திகதி அவரது பிரத்தியோக செயலாளராக இருந்த சகோதரர் காணி ஒன்றிற்கு 15 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய நிலையில் மட்டக்களப்பு நகரிலுள்ள உணவகம் ஒன்றில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.