
ஏழு முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களை ஸ்தாபிக்க திட்டம்!
இலங்கை முதலீட்டு சபை இந்த ஆண்டில், அதிக அளவிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை கவரும் நோக்கில் பல திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 3 தசம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை இலக்காக கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக முதலீட்டு சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதில் குறிப்பாக இந்த ஆண்டிற்குள் 1 தசம் எட்டு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நேரடி மூதலீட்டை பெறமுடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தவிர, 2025 ஆம் ஆண்டில் ஏழு முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, வட மாகாணத்தில் மூன்று வலயங்களும், கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் தலா ஒவ்வொரு முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களும் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன், காலி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இரண்டு தொழில் நுட்ப வலயங்கள் அமைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் ஊக்குவிப்பு திட்ட விண்ணப்பங்கள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது இலங்கையில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் மீண்டும் ஆர்வம் காட்டி வருவதாக இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டில் 90 முதலீட்டு திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
