
கரீபியன் கடலில் சக்திவாய்ந்த நில அதிர்வு: ஆழிப்பேரலை எச்சரிக்கை
கரீபியன் கடலில் நேற்று சனிக்கிழமை மாலை 7.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோண்டுராஸ் வடக்கில் உள்ள கேமன் தீவுகளின் கடற்கரையிலிருந்து 209 கிலோமீட்டர்கள் தொலைவில் 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பல நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்க அட்லாண்டிக் அல்லது வளைகுடா கடற்கரைகளில் ஆழிப்பேரலை எதிர்பார்க்கப்படவில்லை என்றும், புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் விர்ஜின் தீவுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நில அதிர்வினால் உருவான அபாயகரமான ஆழிப்பேரலை அலைகள், கேமன் தீவுகள், ஜமைக்கா, கியூபா, மெக்சிகோ, ஹோண்டுராஸ், பகாமாஸ், பெலிஸ், ஹைட்டி, கோஸ்டாரிகா, பனாமா, நிகரகுவா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் மையப்பகுதியிலிருந்து 620 மைல்களுக்குள் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பசிபிக் ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.