விற்பனைக்கு வைத்திருந்த பழுதடைந்த பழவகைகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு!

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் கல்முனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், பழுதடைந்த திராட்சை மற்றும் தோடம்பழங்கள் உள்ளிட்ட பழவகைகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும், பங்கசு படர்ந்த திராட்சை பழங்கள், அழுகிய தோடம்பழங்கள் உள்ளிட்ட பழவகைகள் யாவும், இன்று சனிக்கிழமை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இன்று சனிக்கிழமை முற்பகல் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், பழுதடைந்த பழங்கள் வீதியோரங்களில் விற்பனை செய்யப்படுவதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளருக்கு, முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய, செயற்பட்ட பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன், ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சென்ற பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள், பெருந்தொகைையான பழுதடைந்த திராட்சை பழங்கள், தோடம்பழங்கள் உள்ளிட்ட பழங்களை மீட்டுள்ளதுடன், அவை அழிக்கப்பட்டன.

மேலும், இந்நடவடிக்கையை முன்னெடுத்த சுகாதார அதிகாரிகள், குறித்த திராட்சை பழங்கள் மற்றும் ஏனைய பழங்களை வீதியோரங்களில் விற்பனை செய்த நபர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

குறித்த பழ வகைகள் யாவும், குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், வெளிமாவட்டங்களில் விற்பனைக்காக இங்கு கொண்டுவரப்பட்டுள்ளமை, விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்