இறந்த நிலையில் கைவிடப்பட்டு கிடக்கும் ஆமைகள்!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில், சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை காலை, மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

கடலின் சீற்றம் காரணமாக, கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக, அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால், கரையொதுங்கிய ஆமைகள், இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில், துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும், உருக்குலைந்தும் காணப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.