
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்குமாறு த.ம.வி.புலிகள் கட்சி கோரிக்கை
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்குமாறு தெரிவித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவிற்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத,
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தாங்கள் இம் மாகாணத்தின் வலுவாக்கத்திற்காகவும் இன ஒற்றுமைக்காகவும் யுத்தத்தாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்டு வளமான எதிர் காலத்தை நோக்கி பயணிக்கின்ற அனைவருக்கும் சிறந்ததொரு சேவையினை வழங்க வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்.
மட்டக்களப்பில் கடந்த 13.01.2025 ஆம் திகதி ஆரம்பித்த அடைமழை, வெள்ளப்பெருக்கு, நீரேந்து பகுதிகளின் வான்கதவுகள் திறக்கப்பட்டமையினால் 20069 தனிநபர்கள் அடங்கலாக 6607 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ சேவை நிலையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள், மேட்டு நிலப்பயிர்ச் செய்கையாளர்கள், விவசாயிகள், நாளாந்தம் தொழில் புரிந்து வாழ்க்கையினை நடத்துபவர்கள் என அனைவருமே இச்சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் பெய்துவரும் அடை மழையினாலும் வீடுகளுக்குள்ளும் வளவுகளுக்குள்ளும் நீர் தேங்கி நிற்கும் நிலையும் காணப்படுகின்றது. ஆனால் எல்லோராலும் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களுக்கு செல்வதென்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகும்.
எனவே, “அஸ்வெஸ்ம உள்ளதா?”, “இடம்பெயர்ந்துள்ளீர்களா?” என்கின்ற சுற்று நிரூபங்களுக்கு அப்பால் மனிதநேயத்துடன் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள நாளாந்த வருமானத்தினை நம்பி வாழ்கை நடத்தும் அனைவருக்கும் அரசுஇ அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக நிவாரணங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
