
ரயில் பயணச்சீட்டு 27,500 ரூபாவுக்கு விற்பனை: ஒருவர் கைது
ஓடிசி ரயிலுக்கான 2000 ரூபா பெறுமதியான பயணச்சீட்டை 27,500 ரூபாவுக்கு விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்ல, பதுளை, பண்டாரவளை போன்ற சுற்றுலா பிரதேசங்களுக்கான விசேட சுற்றுலா ரயிலான ஓடிசி ரயில் சேவைக்கான 2000 ரூபா பெறுமதியான இரண்டு பயணச்சீட்டுக்களை சுற்றுலாப் பயணி ஒருவருக்கு 27,500 ரூபாவுக்கு விற்பனை செய்தவரை பேராதனை புகையிரத நிலையத்தில் வைத்து கண்டி பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், சந்தேக நபர் சுற்றுலா தொடர்பான நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி எனவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக குற்ற புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பயணச்சீட்டு மோசடி விடயத்தில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் சம்பந்தப்பட்டுள்ளனரா என விசாரணை செய்ய கண்டி பிரதேசத்தில் பல இரகசிய பொலிஸ் குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் கண்டி பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அனுருத்த பண்டாரநாயக்க தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
