இவ் வருடத்திற்குள் பெருந்தோட்ட மக்களுக்கான 4350 புதிய வீடுகள்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தோட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆண்டிற்குள் 4350 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு பெருந்தோட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து அவர்களை வறுமை நிலையிலிருந்து மீட்டெடுப்பது அரசாங்கத்தின் பிரதான நோக்கமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தோட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை தங்களது அரசியல் நட்பு வட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது எனவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இப் புதிய வீடுகள் தோட்ட புறங்களில் வாழும் உரிய பயனாளிகளுக்கு மாத்திரம் வழங்கப்படும், என அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சில், அரசாங்கத்தினால் குத்தகைக்கு விடப்பட்டுள்ள பெருந்தோட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலின் போது இதனை தெரிவித்திருந்தார்.

மேலும் குடிசன புள்ளி விபர மதிப்பீடுகளுக்கு அமைய 83.75% மானோர் இலங்கையில் சொந்த குடியிருப்புக்களில் வாழ்ந்து வருவதோடு, அதில் 5.6% மானோர் தோட்ட புறங்களை சார்ந்தவர்களாவர்.

இது மிகவும் ஒரு குறைந்த எண்ணிக்கையாகும், இலங்கையின் வாழும் சமூக கட்டமைப்பின் படி வறுமையானோர் 11.9% ஆவார், அதிலும் பெருந்தோட்ட பகுதியில் 29.7% மானோர் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் தோட்ட புறங்களில் வாழும் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கான வீட்டு பிரச்சினைக்கான விரைவான ஒரு தீர்வினை பெற்றுக்கொடுப்பது எமது தலையாய கடமையாகும்

10,000 இந்திய உதவி வீட்டுத் திட்டத்தின் கீழ் 1,300 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், 2025 ஆண்டு முடிவதற்குள் 4,350 வீடுகளும், 2026 வருடம் மேலும் 4,350 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு, தோட்ட மக்களுக்கு அவ் வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இக் கலந்துரையாடலின் போது, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, அரசாங்கத்தினால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள பிரதேச பெருந்தோட்ட கம்பனிகளின் மேல் மட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.