இன வாத அரசியல் நெருக்கடி நிறைவுக்கு வந்திருக்கின்றது: அருண் ஹேமச்சந்திரா

தேசிய மக்கள் சக்தியின் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் பட்டிருப்பு தொகுதியின் இளைஞர் அணி ஸ்தாபித்தல் நிகழ்வு வெளிவிவகார பிரதி அமைச்சரும் , மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமாகிய அருண் ஹேமச்சந்திரா தலையில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு , பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் அலெக்ஸ்சாண்டர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.இதன் போது பட்டிருப்பு தொகுதி இளைஞர் அணி ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கருத்து தெரிவித்த வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா,

இந்த நாடு பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தது அதிலிருந்து நாங்கள் மீண்டுவந்து கொண்டிருக்கிறோம். இன்றைய நிலையில் வங்குரோத்து நிலையில் இருந்து நாங்கள் மாறி இருக்கின்றோம் ஆனால் சமூக நெருக்கடி இன்னும் ஒரு புறத்தில் மிகவும் பெரிய நெருக்கடியாக காணப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டம் விவசாய மாவட்டமாக காணப்படுகின்றதனால் இங்கு நெல் சந்தைப்படுத்தல் சபையினை நாங்கள் சரியான முறையில் ஸ்தாபிப்போம் , மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வருகின்ற யானை மனித மோதலுக்கு சிறந்த தீர்வினை கொண்டு வர இருக்கின்றோம்.

இங்கு குறிப்பாக வனவிலங்கு அதிகார சபையில் பல்வேறு விதமான ஸ்திரத்தன்மை காணப்படுகின்றது. குறிப்பாக அதிகாரிகள் பற்றாக்குறை காணப்படுகிறது வாகனங்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. இவை அனைத்தையும் தீர்ப்பதற்குரிய ஏற்பாடுகளை நாம் செய்வோம். இங்கு முறையான ஒரு சிஸ்டம் இல்லாத காரணத்தினால் தான் இவ்வாறான பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன அனைத்தையும் நாம் நிவர்த்தி செய்வோம்.

இந்த மாவட்டத்தில் தேசிய ஒற்றுமை  மிகவும் சீர்குலைந்த தன்மையில் காணப்படுகின்றது. ஆகவே அதனை நாங்கள் தோற்கடித்து சரியான முறைமையினை கையாண்டு ஒரு புரிந்துணர்வினை, ஏற்படுத்தி நாம் ஒரு நாடு என்ற ரீதியிலே மாவட்ட ரீதியிலே நாங்கள் முன்னணியில் திகழ வைக்க தயாராக உள்ளோம்.

இங்கு இனவாதத்தை விதைத்து, அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள் அனைத்து அரசியல் கலாச்சாரங்களும் மாற்றப்படும், மக்களை பிளவுபடுத்தி ஏற்படுத்தப்பட்ட அரசியலை மிக குறுகிய காலத்திற்குள் நாம் மாற்றி அமைத்துள்ளோம். இனவாதத்தைப் புறந்தள்ளி நாம் இலங்கையர் என்ற சிந்தனையில் முன்னோக்கி செல்வோம்.

எமது அரசாங்கம் தொடர்பாக தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு விதமான நல்ல அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன, எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்று போலியான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றியவர்களுக்கு தற்போது சரியான பாடத்தினை மக்கள் புகட்டி உள்ளனர் அத்தோடு சர்வதேச சமூகமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் அனைவருக்கும் எம் எஸ் டி கலாச்சாரம் ஒன்று காணப்பட்டது அதனை நாம் மாற்றியமைத்துள்ளோம். எமக்கு எச்சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு தேவையில்லை , நாங்கள் கொலை ,கொள்ளை, போன்ற எந்த துஸ்பிரயோகங்களையும் செய்யாத நேர்மையாக செயற்படுகிறோம்.நாங்கள் மக்களால் பாதுகாக்கப்படுகின்றோம். மக்களுக்கு எங்களால் சேவை தொடரும். ஜனாதிபதி முதற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை, அனைத்து அரச சலுகைகளையும் புறந்தள்ளி , மாற்றத்தை எம்மில் இருந்து ஆரம்பித்துள்ளோம் எனவும் கருத்து தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்