மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து பாயும் வெள்ளம்: போக்குவரத்து பதிப்பு

மட்டக்களப்பு போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து வெள்ளநீர் பாய்வதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் குளங்களில் நீர் அதிகரித்ததை அடுத்து, நவகிரி குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதி ஊடாக வெள்ள நீர் ஊடறுத்து செல்வதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு வெள்ள நீர் ஊடறுத்து செல்வதால் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், அரச ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இராணுவத்தினரின் உதவியுடன், மட்டக்களப்பு போரதீவுபற்று பிரதேச சபையின் ஊழியர்கள் உழவு இயந்திரம் மூலம் பாதுகாப்பாக பிரயாணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே இவ்வாறு ஒவ்வொரு வருடமும் ஏற்படும் வெள்ள அனர்த்தம் காரணமாக தாம் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு நிலையான பாலம் ஒன்றை அமைத்து தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்