நீதிமன்ற வழக்கிற்கு வந்த பெண் மீது துப்பாக்கி சூடு!
மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு வந்த தம்பதியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில், 40 வயதுடைய பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் இலக்கு அந்த பெண்ணுடன் இருந்த ஆணாக இருக்கலாம், என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு தொடர்பில், நேற்று சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோதே, இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
நேற்று சனிக்கிழமை மாலை 3 மணியளவில் மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த தம்பதியரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்த இருவர், மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு 13 பகுதியில் வசிக்கும் நிலுகா தில்ஹானி என்ற (வயது 40) பெண்ணாவார்.
பலத்த காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
