
இளைஞர் வள நிலையம் அங்குரார்ப்பணம்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
இளைஞர் யுவதிகளின் ஆளுமைத் திறனையும் பொருளாதார அபிவிருத்தியையும் மேம்படுத்தும் நோக்கத்திற்காக இளைஞர் வள நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டச் செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தலைமையில் ஹெல்விற்றாஸ் சர்வதேச நிறுவனத்தினால் நிதியளிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்திற்கான இளைஞர் வள அபிவிருத்தி நிலையம் லிங்கநகரில் இன்று புதன் கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாவட்டச் செயலாளர் ஹெட்டியாராச்சி, இந்த மாவட்டத்திலே இருக்கின்ற இளைஞர் யுவதிகளின் ஆற்றல் திறன்களை இனம் கண்டு அவர்களது ஆக்கபூர்வமான முயற்சிக்கு அரச நிருவாகத்தின் சார்பிலே அத்தனை ஆதரவையும் வழங்க முடியும்.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் நாம் ஏதாவது திட்டங்களைச் செய்ய அவர்களிடம் கேட்டுக் கொண்டால் அந்த விடயத்தை உடனடியாக முன்வந்து நிறைவேற்றித் தருவதில் அவர்கள் ஆர்மாக இருக்கிறார்கள். அரச நிருவாகத்தோடு சேர்ந்து நிருவாகத்துக்குத் தகுந்த முறையில் திட்டங்களை அவர்கள் அமுல்படுத்துகிறார்கள். அந்த வகையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் வள நிலையமும் இந்த மாவட்டத்திலே உள்ள இளைஞர் யுவதிகளின் ஆற்றல் திறன்களை வளர்த்து அதன் மூலம் அவர்கள் பொருளாதார முன்னேற்றமடைய உதவும்” என்றார்.
இந்நிகழ்வில், ஹெல்விற்றாஸ் சிறிலங்கா உதவு நிறுவன திட்ட முகாமையாளர் கௌசிகன் சிவலிங்கம், திருகோணமலை மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் கலாதேவி உதயராஜா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி எஸ். யுவராஜ்குமார், திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான இணைப்பாளர் ஏ.எம்.எஸ்.பி. அத்தநாயக்க, திருகோணமலை மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அலுவலர் சுவர்ணா தீபானி உட்பட இன்னும் பல அரச, அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், இளைஞர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், இளைஞர் யுவதிகள் சமூக மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
