களுவாஞ்சிகுடி உதயசங்கமம் மகளிர் கொத்தணி அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் கெளரவிப்பும்

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் மகிழூர் கிழக்கு கிராம சேவகர் பிரிவின் கீழ் இயங்கும் உதயசங்கமம் மகளிர் கொத்தணி அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும், கெளரவிப்பு விழா நிகழ்வானது இன்று புதன்கிழமை அமைப்பின் தலைவி திருமதி. மங்கையற்கரசி கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உதயசங்கமம் மகளிர் கொத்தணி அமைப்பின் கீழ் சிறப்பாக இயங்கும் 15 சுய உதவி குழுக்களின் சேமிப்புகள் மற்றும் வழங்கிய கடன் வசதிகள் போன்றவற்றின் முன்னேற்றம் தொடர்பாக சுய உதவி குழுக்களினால் காட்சிப்படுத்தப்பட்டதுடன், மகிழூர் கிழக்கு கிராமத்தில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த  (உ/த) பரீட்சைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம், லீடர் ஒஃப் ஹோப் (LOH ( Ladder of Hope) அமைப்பின் பொது முகாமையாளர் திருமதி சகுந்தலா ரஞ்சினி மதிதரன், மண்முனை தென் எருவில்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி. சத்யகெளரி தரணிதரன் மற்றும் களுவாஞ்சிகுடி இலங்கை வங்கி முகாமையாளர் சா. சிவஞானம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

மேலும் மகிழூர் கிராமத்தின் முதல் சட்டத்தரணியாக கடமை புரியும் திருமதி. நிறோஜினி புருசோத்மன் மற்றும் உதயசங்கமம் மகளிர் அமைப்பின் முன்னேற்றத்திற்கு பங்காற்றிய மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சந்திரசோதி ஜெயதீஸ்வரன் ஆகியோரும் இந்த நிகழ்வில் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மகிழூர் கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், LOH அமைப்பின் உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள், முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த உதயசங்கமம் மகளிர் கொத்தணி அமைப்பானது களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் ஒரு முன்மாதிரியான அமைப்பாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்