காய்ச்சல் பரவல் காரணமாக மன்னார் இராணுவ பயிற்சி முகாமின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

காய்ச்சல் பரவல் காரணமாக மன்னார், விடத்தல்தீவு – பெரியமடு பகுதியில் உள்ள இராணுவ பயிற்சி முகாமின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த இராணுவ பயிற்சி முகாமில் பயிலும் இராணுவ சிப்பாய்கள் தனிமைப்படுத்தபட்டுள்ளதாக இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் முதல் பயிற்சியில் ஈடுபட்ட சிப்பாய்களிடையே காய்ச்சல் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டது.

இதனையடுத்து, 25 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கொட தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நோய் நிலைமை பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளதாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்