ரயிலுடன் ஹயஸ் வேன் மோதி விபத்து!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் ரயிலுடன் ஹயஸ் வேன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த வேன், தவசிகுளம் பகுதிக்கு செல்வதற்காக ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.
வேனில் சாரதியுடன் மேலும் ஒருவர் பயணித்துள்ளார், இந்த நிலையில் இடம்பெற்ற விபத்தில் தெய்வாதீனமாக இருவருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை எனவும், வேன் பின் பகுதியில் சிறிய சேதங்களுக்குள்ளாகி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
