வைத்தியசாலை வீதியில் மின்விளக்குகள் இன்மையால் தொடரும் விபத்துகள்!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூரில், முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற சாரதியான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சிறு காயத்துடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

இச்சம்பவம் தோப்பூர் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

தோப்பூர் வைத்தியசாலை வீதியில் தினந்தோறும் இரவு வேளையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பிரயாணம் செய்கின்ற போதிலும், வீதி மின் விளக்குகள் ஏதும் இதுவரை பொருத்தப்படவில்லை.

இதனால் இவ் வீதியில் அதிகளவு வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே விபத்துக்களை கட்டுப்படுத்த, தோப்பூர் வைத்தியசாலை வீதிக்கு மின் விளக்குகளை பொருத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, தோப்பூர் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.