ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

வரத்தக அமைச்சராக அவர் பதவி வகித்த காலப்பகுதியில் சதொச நிறுவனத்தின் பணியாளர்கள் 153 பேரை உத்தியோகபூர்வ கடமையிலிருந்து விலக்கி புறம்பான பணிகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இன்று புதன் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்னிலையாகாத நிலையில், இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.